திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவின் நிலைப்பாடு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்டுகள், விசிக போன்ற கட்சிகள் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களில் பலர் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2017 முதல் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, தற்போது என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த முதல்வர் விஜய்யை, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து வரவேற்றார். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகக் கருதப்படுகிறது.
'துரதிருஷ்டவசமாக நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். அதனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது' என துரை வைகோ கூறியது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா அல்லது தமிழக வெற்றிக் கழகத்துடன் இணக்கத்தை அதிகரிக்குமா என்ற சந்தேகம் நீடிக்கிறது.
மேலும், அமைச்சர்களின் ஆய்வுக் கூட்டங்களில் துரை வைகோ பங்கேற்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக ரீதியான முடிவுகளை வரவேற்பது போன்ற செயல்களால் மதிமுக-தமிழக வெற்றிக் கழகம் இடையே இணக்கம் அதிகரிப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பாக, வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மதிமுக நிர்வாகிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைய வேண்டும் என வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.