இளைஞர்கள் அரசியலை அறிந்திருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கையை மறந்து அரசியலில் முழுவதும் மூழ்கி விடக்கூடாது. இளைஞர்களின் நேரம் வீணாகக் கூடாது. சமூக வலைத்தளங்களில் மூழ்கி விடாமல், வாழ்க்கை முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்.
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய தளங்களில் அதிக நேரம் செலவழிக்கும் நிலை அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் தங்களின் தினசரி வேலைகள், தொழில் வளர்ச்சி மற்றும் கல்வி தொடர்பான கவனத்தை குறைத்து, இணைய உலகில் அதிகமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் சூழ்நிலைகள், சமூக வலைத்தள அரசியல் விவாதங்கள் மற்றும் இளைஞர்களின் இணைய ஈடுபாடு குறித்து சமூக ஆர்வலர் மற்றும் வர்த்தக ஆலோசகர், ரீடெயில்ஜி (RetailG) நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.அருண்குமார் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘தேர்தல் காலங்களில் அரசியல் மீது ஆர்வம் காட்டுவது தவறில்லை என்றாலும், அது வாழ்க்கையின் முழு கவனமாக மாறக்கூடாது’.
‘கடந்த சில வாரங்களாக நாம் அனைவரும் ஒரு பெரிய அரசியல் சூழ்நிலையை பார்த்தோம். சமூக வலைத்தளங்கள் முழுவதும் அரசியல் விவாதங்கள், ஆதரவு பதிவுகள், விமர்சனங்கள், பிரச்சாரங்கள் என இளைஞர்கள் மிக அதிகமாக ஈடுபட்டனர். அரசியல் விழிப்புணர்வு அவசியம் தான். நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜனநாயக செயல்பாட்டில் இளைஞர்கள் பங்கேற்பது நல்ல விஷயம். ஆனால், எந்த ஒரு விஷயத்திலும் அளவுக்கு மீறிய ஈடுபாடு வாழ்க்கையின் முக்கிய பாதையை மாற்றக்கூடாது’.
‘இன்று பல இளைஞர்கள் தங்களது நேரத்தின் பெரும்பகுதியை கைபேசியில் செலவழிக்கிறார்கள். காலை முதல் இரவு வரை சமூக வலைத்தள அரசியல் விவாதங்களில் மூழ்கி விடுகிறார்கள். சில நேரங்களில் அது மன அழுத்தத்தையும், கோபத்தையும், தேவையற்ற வாதங்களையும் உருவாக்குகிறது. ஆனால் அதே நேரத்தில் வாழ்க்கையில் முன்னேற தேவையான திறன்கள், கல்வி, தொழில் வளர்ச்சி, உடல் நலம், குடும்ப பொறுப்புகள் ஆகியவை பின்னால் தள்ளப்படுகின்றன’.
‘தேர்தல் முடிந்துவிட்டது. மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியேற்று விட்டார்கள். இனி அரசியல்வாதிகள் தங்களது பணியை செய்வார்கள். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை மேற்கொள்வார்கள். இப்போது இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை நோக்கி திரும்ப வேண்டிய நேரம் இது. ஒரு மாணவர் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். ஒரு இளைஞர் நல்ல வேலை பெற வேண்டும். ஒரு தொழில் முனைவோர் தனது நிறுவனத்தை வளர்க்க வேண்டும். ஒரு குடும்பத்தை முன்னேற்ற வேண்டும். இதுவே உண்மையான வெற்றி’.
‘இன்றைய தலைமுறைக்கு மிகப்பெரிய சவால் கவனச்சிதறல். இணையம் ஒரு சக்தி. அதே நேரத்தில் அது நேரத்தை விழுங்கும் ஒரு உலகமும் கூட. தகவலை பயன்படுத்த வேண்டும்; அதில் முழுவதும் தொலைந்து போகக்கூடாது. இன்று பலருக்கு திறமை இருக்கிறது. கனவுகள் இருக்கின்றன. ஆனால் தொடர்ச்சியான கவனம் இல்லை. ஒரு மணி நேரம் சமூக வலைத்தளத்தில் விவாதிப்பதை விட, அந்த ஒரு மணி நேரத்தை ஒரு புதிய திறன் கற்க பயன்படுத்தினால், வாழ்க்கை பல ஆண்டுகள் முன்னேறும்’.
‘இளைஞர்கள் அரசியலை அறிந்திருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கையை மறந்து அரசியலில் முழுவதும் மூழ்கி விடக்கூடாது. இளைஞர்களின் நேரம் வீணாகக் கூடாது; அது எதிர்கால முதலீடாக மாற வேண்டும். நாளைய உலகம் இளைஞர்களின் கையில் உள்ளது என்று நாம் அடிக்கடி சொல்கிறோம். ஆனால் அது வெறும் வாசகம் மட்டும் ஆகக் கூடாது. ஒவ்வொரு இளைஞரும் தங்களது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் அடைய முயற்சிக்க வேண்டும். கல்வி, தொழில், வேலை, ஒழுக்கம், உடல் நலம், குடும்ப பொறுப்பு — இவை அனைத்திலும் கவனம் செலுத்தும் தலைமுறையே நாட்டை உயர்த்தும்’.
‘இப்போது அரசியல் பரபரப்பிலிருந்து வெளியே வந்து, வாழ்க்கை முன்னேற்றப் பயணத்தை தொடங்க வேண்டிய நேரம் இது. இழந்த நேரத்தை மீண்டும் திரும்பப் பெற இயலாது. வாழ்க்கையில் உங்கள் வளர்ச்சிக்காக, உங்கள் எதிர்காலத்திற்காக யாரும் வந்து பாதையை அமைத்து தர மாட்டார்கள் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். நேரத்திற்கு மதிப்பு கொடுங்கள். சமூக வலைத்தளங்களில் அளவுக்கு மீறி நேரத்தை செலவிடுவதை குறைத்து, உங்கள் இலக்குகளை நோக்கி நகருங்கள். கவனம் சிதறாமல் தொடர்ந்து முயற்சி செய்பவர்களே நாளைய உலகை உருவாக்கப் போகிறார்கள். கனவுகளை மட்டும் காணாமல், அதை அடையும் பயணத்தையும் தொடங்குங்கள். நாளைய உலகை உருவாக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறுங்கள்’ என்று கூறியுள்ளார்.