தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட் கே. நாராயணா நியமனம் செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தனது இறுதிப் படமான ஜனநாயகனை தயாரித்து, திரையுலகிலிருந்து விடைபெறும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்திய வெங்கட் கே. நாராயணாவுக்கு, தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் வழங்கியுள்ளார். இது மிகவும் வருந்தத்தக்க செயல்' என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படும் டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி, தமிழகத்தின் கோரிக்கைகளையும் திட்டங்களையும் மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் முக்கியப் பதவி ஆகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்கான நல்லாட்சியை வழங்க வேண்டுமே தவிர, தங்களுக்கு வேண்டியவர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் உயர் பதவிகளை வழங்கக் கூடாது.
எனவே, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட் கே. நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்' என்று டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த நியமனம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.