திமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை நேரில் சந்திக்க விஜய்க்கு ஏன் தயக்கம் ஏற்படுகிறது என்றும், அவர் ஸ்கிரிப்டை வைத்தே பேசுவதாகவும் பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சோதனையை எதிர்கொண்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அன்றிரவே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். ஆனால், கரூர் சம்பவத்திற்கு பிறகு உங்களில் யாராவது செய்தியாளர்களை சந்தித்ததுண்டா? இன்று வரை ஸ்கிரிப்ட் வைத்தே பேசும் உங்கள் தலைவர் விஜய்க்கு, செய்தியாளர்களை நேரில் சந்திக்க ஏன் தொடை நடுங்குகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "எ.வ.வேலு அவர்கள் மீதான சோதனையில் ஆதாரம் எதுவும் இல்லை, உங்கள் அவதாரம் விரைவில் தோலுரியும்! தைரியத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என்று யார் சொல்லுகிறார் தெரியுமா? கரூரில் 41 அப்பாவி பொது மக்கள் பலியாவதற்கு காரணமான தவெக தலைவர் விஜய் பின்னங்கால் பிடற ஓடி ஒளிந்தவர் வரிசையில் உங்கள் அலைப்பேசியைக்கூட அணைத்துவைத்து தலைமறைவான ராஜ்மோகன் பேசலாமா?" என்றும் பரந்தாமன் குறிப்பிட்டுள்ளார்.
"நேற்று மழையில் முளைத்த தமிழக வெற்றிக் கழகம், 75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுக-வைப் பார்த்து தைரியம் பற்றி பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. உங்களுக்கு மிசா தெரியுமா? பொடா தெரியுமா? சிறைவாசம் கண்டதுண்டா?" என அவர் சவால் விடுத்துள்ளார்.
"சினிமாவில் நடித்தவர் தலைவர், மேடைகளில் தொகுத்தவர் அமைச்சர் என உருவான இந்த இன்ஸ்டன்ட் அமைச்சரவை எத்தனை நாள் நீடிக்கிறது என்று பார்ப்போம்" என்று தனது அறிக்கையை முடித்துள்ளார் பரந்தாமன்.