முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். "திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை" என்று ராகவா லாரன்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆசைக்காக அரசியலுக்கு வரமாட்டேன் என்றும், மக்களுக்காகவே அரசியலுக்கு வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், அதற்காக அரசியலுக்கு வரமாட்டேன் என்று நினைக்க வேண்டாம் என்றும், எங்கு சென்றால் தனக்கு மரியாதை கிடைக்குமோ அங்கு செல்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"தர்மம் என்று ஒன்று இருக்கிறது. திருச்சி கிழக்கில் நான் நிற்க வேண்டுமா? அல்லது விஜய் சார் ஹீரோ ஆனதில் இருந்து போஸ்டர் ஒட்டிய ஒருவர் நிற்க வேண்டுமா? அல்லது கட்சி ஆரம்பித்ததில் இருந்து உழைத்தவர் நிற்க வேண்டுமா? இன்னும் எத்தனை பேரோ? அதை விஜய் சார்தான் முடிவு செய்வார். யாரோ ஒருவர் விதை போட்டு, செடிக்கு தண்ணீர் ஊற்றி, மரம் வளர்ந்து பழம் தருகிறது. அந்தப் பழத்தை நான் சாப்பிடலாமா? கட்சியில் உறுப்பினராக சேர்ந்து, நான்கு ஆண்டுகள் உழைக்க வேண்டும். அதற்குப் பிறகு தலைமையைப் பார்த்து சீட் கொடுத்தால், அந்தப் பதவியில் அமர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதுதான் தர்மம்" என்று அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.