சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில் கனமழை காரணமாக தேங்கியிருந்த நீரில் கார் மூழ்கியதில், அதில் பயணம் செய்த கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் வெங்கடாசலம் மற்றும் அவரது மனைவி ராதா ஆகியோர் நேற்று இரவு பெய்த கனமழையால் செம்மாண்டப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த நீரில் காரில் பயணித்துள்ளனர். அதிகாலை 5 மணியளவில் சுரங்கப்பாதையைக் கடந்தபோது, கார் திடீரென நீரில் மூழ்கத் தொடங்கியது. வயதான தம்பதியினர் என்பதால் அவர்களால் உடனடியாக காரிலிருந்து வெளியே வர இயலவில்லை. இதனால், காருடன் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
காலையில் அந்த வழியாகச் சென்ற கிராம மக்கள், சுரங்கப்பாதையில் கார் மூழ்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஓமலூர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காரில் இருந்து கணவன் மனைவியின் உடல்களை மீட்டனர். பின்னர், உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இப்பகுதியில் தொடர்ந்து மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.