சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு வருவதில்லை என்ற புகாரை அடுத்து, காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தனித்தனியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தலைமைச் செயலக அலுவலகக் கையேட்டின்படி, அனைத்து அலுவலர்களும் காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு சார்பு செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள் ஆகியோர் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்களை எவ்வித தவறுமின்றி, மிகக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கான சுற்றறிக்கையில், அனைவரும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், சம்பந்தப்பட்ட இரண்டாம் நிலை அலுவலர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர்கள் மற்றும் பதிவு எழுத்தர்கள் காலை 9.30 மணிக்கே அலுவலகத்தில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவித விடுப்பு அல்லது அனுமதி பெறுவதற்கும், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முன் அனுமதி பெறுவதுடன், விடுப்புப் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற தவறினால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
