2026 ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ள நிலையில், அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளராக எம்.எஸ்.தோனி பொறுப்பேற்க வேண்டும் என இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. லீக் சுற்றின் கடைசி 3 போட்டிகளில் வரிசையாகத் தோல்வியடைந்த சிஎஸ்கே, 14 போட்டிகளில் 6 வெற்றி, 8 தோல்விகளுடன் பிளே-ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
2023-ல் ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, தொடர்ந்து 3 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அவசியமான முதல் 4 இடங்களுக்குள் நுழைய முடியவில்லை. இதனால் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை மாற்ற நிர்வாகம் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர், சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளராக அஸ்வினை நியமிக்கக் கூடாது. ஏனெனில் அவர் போட்டி தொடங்குவதற்கு முன்பே தனது யூடியூப் சேனலில் பிளேயிங் 11 மற்றும் ரகசியத் திட்டங்களை வெளியிட்டுவிடுவார் என நகைச்சுவையாகப் பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அஸ்வின், உங்களது கருத்தை நான் முழுமையாக ஏற்கிறேன். நான் திட்டங்களைச் சொன்னால் எதிரணிக்கு அது சாதகமாகிவிடும் என வேடிக்கையாகக் கூறினார். தொடர்ந்து அதே பதிவில் ஒரு முக்கிய விஷயத்தை அஸ்வின் சுட்டிக்காட்டினார். இன்னொரு விஷயம், எம்.எஸ்.தோனி அங்கேயே இருக்கும்போது, நீங்கள் ஏன் பயிற்சியாளருக்காக வேறு யாரைத் தேடுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தோனிக்கு சிஎஸ்கே அணியின் கட்டமைப்பு மற்றும் வீரர்களின் பலம், பலவீனம் குறித்து அணு அணுவாகத் தெரியும் என்பதால், அவரே பயிற்சியாளர் பதவிக்கு மிகச்சரியான நபர் என்பது அஸ்வினின் கருத்தாக உள்ளது.
2026 ஐபிஎல் சீசன் முழுவதும் காயம் காரணமாகத் தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. முதலில் கெண்டைக்கால் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட அவர், பின்னர் கட்டைவிரல் காயத்தால் பாதிக்கப்பட்டார். ஒரு வீரராக அவரால் இனி விளையாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர் பயிற்சியாளராகவோ அல்லது ஆலோசகராகவோ சிஎஸ்கே அணியில் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அஸ்வின் கொடுத்துள்ள இந்த ஐடியா சென்னை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தோனியின் அடுத்த கட்ட முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறிய ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.