ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக ஆறாவது தோல்வி கிடைத்துள்ளது. தர்மசாலாவில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 222 ரன்கள் குவிக்க, பஞ்சாப் அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த தோல்வி, பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தொடர் தோல்விகள் முகத்தில் அடித்தாலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. ஆனால், இது தற்காலிகமானதே. 61 போட்டிகள் முடிவடைந்த நிலையில், மற்ற அணிகளின் ஆட்ட முடிவுகள் பஞ்சாபின் நிலையை மாற்றியமைக்கக்கூடும். ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தினால், பஞ்சாப் அணி ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்படும். திங்கட்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வென்றால், ஆறாவது இடத்திற்கும் பின்தங்கும் அபாயம் உள்ளது.
இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தங்களது அடுத்தடுத்த போட்டிகளில் தோற்றால், பஞ்சாப் கிங்ஸ் அணி நான்காவது இடத்திலேயே நீடிக்க வாய்ப்புள்ளது. இந்த தொடர் பின்னடைவுகளுக்கு மத்தியிலும், ஐபிஎல் 2026 ப்ளே ஆஃப் ரேஸில் பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னும் போராடும் நிலையில் உள்ளது.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற, மே 23 அன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதோடு, மூன்றுக்கும் மேற்பட்ட அணிகள் 15 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளுடன் லீக் சுற்றை முடிக்காமல் இருக்க வேண்டும். ஒருவேளை, மே 23 அன்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் தோற்றால், இரண்டாவது சீசனாக ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறும் நிலை ஏற்படும்.
இதற்கிடையில், பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2026 ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக சாதனை படைத்துள்ளது. மே 22 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வென்றால், பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை உறுதி செய்யும்.