மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கின் உச்சமாக, கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரமான 100 நாள் வேலைத் திட்டம் வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏற்கனவே இந்தத் திட்டம் ஆட்சியாளர்களால் முடக்கப்பட்ட நிலையில், தற்போது முழுமையாக நிறுத்தப்படுவது கிராமப்புற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி" எனத் தெரிவித்துள்ளார்.
2025-2026 ஆம் நிதியாண்டில் வெறும் 0.22 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்பட்டுள்ளது. சட்டப்படி அனைத்துப் பயனாளிக் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால், ஏழைகளுக்குச் சாதகமான இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய பாஜக அரசு ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை. இந்தத் திட்டத்தை முடக்குவது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் கொடூரமான நடவடிக்கை.
ஜூலை 1 ஆம் தேதி முதல் 'வி.பி.ஜி.ராம்ஜி' என்ற புதிய பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆனால், இதில் மாநில அரசுகளின் பங்கு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மாநில அரசுகளுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். இதனால், எந்தெந்த மாநில அரசுகள் இத்திட்டத்தைத் தொடரும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மத்திய பாஜக அரசின் இந்த முடிவு, கிராமப்புற மக்களுக்கு எதிரான மிகக் கொடூரமான நடவடிக்கை என்பது 100% உண்மை. இதை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.