தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில், வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கச்சார்குளத்தெரு, கும்பகோணம்-காரைக்கால் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தவமணி (75) என்பவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டிற்கு முகத்தை மூடியபடி வந்த பெண் ஒருவர், வீடு வாடகைக்கு வேண்டும் என்று கூறி தவமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
திடீரென அந்த பெண், தவமணியின் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இந்த முயற்சியில் சங்கிலியில் இருந்த டாலர் தவமணியின் கையில் சிக்கிய நிலையில், மீதமிருந்த 4 பவுன் தங்க சங்கிலியை அந்த பெண் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அவரை தவமணி துரத்திச் சென்றபோது, அந்த பெண் மிளகாய் பொடியை தூவிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து தகவலறிந்த திருநீலக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம பெண் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மெயின் ரோடு பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் பெண் ஒருவர் துணிகரமாக தங்க சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.