சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இரண்டு வாரங்களுக்குள் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து முடக்கம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலரைக் கடந்துள்ளது.
இந்த விலை உயர்வால் ஏற்பட்டுள்ள இறக்குமதிச் செலவினங்களைச் சமாளிக்க, எண்ணெய் நிறுவனங்கள் மே 15 முதல் விலையேற்றத்தைத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து மே 19, மே 23 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து விலையை உயர்த்திய நிறுவனங்கள், தற்போது 14 நாட்களுக்குள் நான்காவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளன. இந்தத் தொடர் மாற்றங்களால் எரிபொருள் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் 100 ரூபாயையும், டீசல் 93 ரூபாயையும் தாண்டியுள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தாவிலும் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தி வந்தாலும், இரண்டு வாரங்களில் அடுத்தடுத்து 4 முறை விலை உயர்த்தப்பட்டிருப்பது சாமானிய மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்த தொடர் உயர்வால் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து, ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.