சென்னை: 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ந்தேதி மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், அதன் ஆயத்தப் பணிகளுக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் குறுகிய கால பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மறுதேர்வுக்கான சிறப்புப் பயிற்சி தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெற்றி பள்ளிகள் உட்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான இந்த குறுகிய கால பயிற்சி முகாம் ஜூன் 20-ந்தேதி வரை நடைபெறும். தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.
இந்த பயிற்சி முகாம்களில், மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராகும் வகையில் பாடவாரியான பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். மேலும், கல்வியியல் நிபுணர்களின் வழிகாட்டுதல்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைப் பெற முடியும்.
மாணவர்கள் இந்தப் பயிற்சி முகாம்களில் பங்கேற்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களின் வருகையை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் பள்ளிச் சீருடையிலும், அடையாள அட்டை அணிந்தும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.