சபரிமலை ஐயப்பன் கோயிலில் அபிஷேக நெய் விற்பனையில் 17 லட்ச ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில், கேரள உயர்நீதிமன்றம் இன்று அவசர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சபரிமலை தேவஸ்வம் நிர்வாகம் சார்பில் அபிஷேக நெய் விற்பனை நடைபெற்று வருகிறது. இதில், 16,628 பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதில் இருந்து பெறப்பட்ட தொகை கணக்கில் வராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிதி முறைகேடு தொடர்பாக பக்தர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டு என்றும், உடனடியாக இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். தேவஸ்வம் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் கேள்விகள் எழுப்பியுள்ள நீதிமன்றம், இந்த மோசடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நெய் ஊழல் விவகாரம், தேவஸ்வம் நிர்வாகத்தின் நம்பகத்தன்மை மீது கேள்விகளை எழுப்பியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கும் என நம்பப்படுகிறது.