மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் VIP சலுகைகள் ஏதுமின்றி, அதிகார தோரணை காட்டாமல், பொதுமக்களுடன் மக்களாக வரிசையில் நின்று, தனது காலணிகளையும் கைபேசியையும் ஒப்படைத்துவிட்டு சாதாரண பக்தரைப் போல் கோவிலுக்குள் சென்றார். கோயிலின் நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
கோவில்களின் நிர்வாகம், வருவாய், சொத்துகள், பக்தர்களுக்கான வசதிகள் அனைத்தும் இனி தீவிர கண்காணிப்பில் இருக்கும் என்றும், எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடமளிக்கப்படாது என்றும் அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக தெரிவித்தார். ஆய்வுகள் தொடரும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வருகின்ற 2 அல்லது 3 மாதங்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாகவும், இதற்கான கட்டுமானப் பணிகளில் 90% நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். பணிகள் முடிந்தவுடன் திட்டமிட்ட தேதியில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
அமைச்சரின் இந்த செயல்பாடு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சாதாரண பக்தர்களைப் போல் வரிசையில் நின்று ஆய்வு மேற்கொண்டது, பக்தர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடுகளுக்கு எதிராக அமைச்சர் எடுத்துள்ள நிலைப்பாடு பாராட்டத்தக்கது.