தவெக அரசை விமர்சனம் செய்த காரணத்தால் 3 செய்தி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
'3 சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, குறிப்பிட்ட 3 சேனல்களின் ஒளிபரப்பு சில செட்-டாப் பாக்ஸ்களில் மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிக்கலைச் சரிசெய்ய, ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் மூலம் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன' என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தத் தகவலுக்கு, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட TN Fact Check என்ற பக்கத்தின் மூலம் தமிழக அரசு விளக்கம் அளித்திருப்பதை முன்னாள் பாஜ நிர்வாகி அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது பதிவில், 'குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பு தடைபட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டதற்கு முதலில் நன்றி. ஆனால், தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும் எப்படி செட்-டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சனைகள் வரும்?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 'பொய்களையும், புரட்டுகளையும் மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது. இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.