ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச லட்டு பிரசாதத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. சுமார் ரூ.3 கோடியே 40 லட்சத்திற்கும் மேல் மோசடி நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2023-24 ஆம் நிதி ஆண்டிலிருந்து, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். இந்நிலையில், இந்த இலவச லட்டு விநியோகத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கோயில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், கோயில் பிரசாத தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு பொறுப்பாக இருந்த இளநிலை உதவியாளர் கே. பஞ்சமூர்த்தி, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி, அவற்றை முறைகேடாக ஸ்டால்களில் விற்பனை செய்துள்ளார். மேலும், வெளி மூலப்பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து, முறைகேடாக லட்டு தயாரித்து கவுண்டர்களில் பக்தர்களிடம் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. 2023 முதல் பிப்ரவரி 2026 வரையிலான காலகட்டத்தில் சுமார் 11 லட்சத்து 40 ஆயிரம் லட்டுகள் இவ்வாறு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த முறைகேட்டால், மொத்தம் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட இளநிலை உதவியாளர்கள் பஞ்சமூர்த்தி, லாவண்யா, அம்பிகா, டிக்கெட் விற்பனையாளர் செல்வி, பணிப்பெண் சிவனேஸ்வரி, தூர்வை பணியாளர் விக்ரம் உள்ளிட்ட 6 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தற்காலிக பணியாளர்களான பிரபு ரவி, நித்தியானந்தம், பாலாஜி ஆகிய 3 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கோடிக்கணக்கில் நடந்த இந்த லட்டு மோசடி பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.