வருங்காலத்தில் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். சித்தாந்த ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும் அதிமுகவையும் சமமாகக் கருத முடியாது என்றும், ஆனால் இரு திராவிடக் கட்சிகளும் தங்கள் பழைய விழுமியங்களையும் கொள்கைகளையும் தற்காலத்தில் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அரசியலில் வாக்குகள் பெறுவதற்காக சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடுவதில்லை என்றும், இவ்வாறு கொள்கைகளில் பல சமரசங்களைச் செய்து கொண்டு தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ளதாகவும் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் சிபிஐ(எம்) மாறி மாறி கூட்டணி வைப்பதும், எதிர்ப்பதும் அரசியல் சூழ்நிலையை பொறுத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
தொகுதி உடன்பாடு கொள்வது இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் ஏற்பாடு என்றும், ஒரு கட்சியின் அரசியல் முடிவில் இன்னொரு கட்சிக்கு ‘துரோகம்’ என்ற வார்த்தைக்கு இடமில்லை என்றும் சண்முகம் தெரிவித்துள்ளார். வெற்றிக்கு பலம் பத்தாததால்தான் கடைசி நேரத்தில் தேமுதிக போன்ற கட்சிகளை திமுக தனது அணியில் சேர்த்தது என்றும், ‘எங்களால் நீங்கள் ஜெயித்து, உங்களால் நாங்கள் ஜெயித்தோம்’ என்பதே யதார்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்கும், மக்களின் விருப்பத்திற்கும் ஏற்பவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்போதைய அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கூறியுள்ள சண்முகம், கூட்டணியை விட்டு விலகினாலே தாக்கும் திமுகவினரின் போக்கு தவறானது என்றும், உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் இத்தகைய நபர்களை திமுக தலைமைதான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.