நிவின் பாலி நடிப்பில் அகில் சத்யன் இயக்கிய 'சர்வம் மாயா' திரைப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் ரியா சிபு நடித்த 'டெலுலு' கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரீத்தி முகுந்தன், தான் முதலில் 'டெலுலு' கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்ததாகவும், ஆனால் இயக்குனர் அகில் சத்யன் வேறு ஒரு கதாபாத்திரத்தை தனக்காக எழுதியதாகவும் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'நான் முதலில் 'டெலுலு' கதாபாத்திரத்திற்காகத்தான் ஆடிஷன் செய்தேன். அப்போது படத்தின் கதை சற்று வித்தியாசமாக இருந்தது. நான் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால், கதை என் கதாபாத்திரத்திற்கும் நிவின் பாலியின் பிரபேந்து கதாபாத்திரத்திற்கும் இடையிலான ஒரு காதல் கதையாக மாறியிருக்கும்' என தெரிவித்தார்.
மேலும் அவர், 'பின்னர், இயக்குனர் அகில் உங்களுக்காக மற்றொரு கதாபாத்திரத்தை எழுதியுள்ளேன், அதை செய்கிறீர்களா?' என்று கேட்டார். அது என்ன கதாபாத்திரம் என்று அப்போது எனக்குத் தெரியாது, அது பிறகுதான் கதையில் சேர்க்கப்பட்டது. ஆனால், அந்த படக்குழுவையும் கதையையும் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் உடனே சம்மதித்தேன்' என்றும் கூறினார்.
இதற்கிடையில், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் நேற்று வெளியான 'பிளாஸ்ட்' திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் சுபாஷ் கே. ராஜ் இயக்கிய இப்படத்தில் அர்ஜுன் மற்றும் அபிராமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'வானவில்' (2000) படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குக் பின் அர்ஜுன் மற்றும் அபிராமி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.