நடிகை ரோஜா, 1992ஆம் ஆண்டு வெளியான 'செம்பருத்தி' திரைப்படத்தின் வாயிலாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சரத்குமாருடன் 'சூரியன்', ரஜினிகாந்துடன் 'உழைப்பாளி', கார்த்திக்குடன் 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 90களில் தமிழ் சினிமாவின் முக்கிய நாயகியாக அவர் வலம் வந்தார்.
2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை ரோஜா குறைத்துக் கொண்டார். தற்போது, 'லெனின் பாண்டியன்' திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார். அத்துடன், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராகப் பங்கேற்று வருகிறார். 'செம்பருத்தி' படத்தின் மூலம் ரோஜாவை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆவார். இருவரும் காதலித்து, 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
நடிகை ரோஜா, சினிமாவைத் தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டினார். 2004ஆம் ஆண்டில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர், 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் அதே நகரி தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்தார்.
இச்சூழலில், நடிகை ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா செல்வமணி, அமெரிக்காவில் உள்ள 'லுடி ஸ்கூல் ஆப் இன்பர்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டிங் அண்ட் இன்ஜினீயரிங்' கல்லூரியில் கணினி அறிவியல் படித்து வந்தார். சமீபத்தில், அமெரிக்காவின் ப்ளூமிங்டனில் அமைந்துள்ள இந்தியானா பல்கலைக்கழகம், அன்ஷு மாலிகாவுக்கு 'ஹெர்மன் பி வெல்ஸ்' விருதை வழங்கிச் சிறப்பித்தது.
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் இந்த உயரிய விருதைப் பெறும் முதல் இந்திய மாணவி அன்ஷு மாலிகா என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி மற்றும் தலைமைத்துவப் பண்புகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெற்ற சில நாட்களிலேயே, ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா தனது பட்டப்படிப்பையும் முடித்து மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.