கன்னியாகுமரி மாவட்ட கனிம வளங்கள் எடுத்துச் செல்வது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் மனக்குழப்பத்தில் இருப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் சந்தித்து, கனிம வளங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக மனோ தங்கராஜ் ஒரு காணொளியை வெளியிட்டார்.
இந்நிலையில், சென்னை வந்திருந்த அனிதா ராதாகிருஷ்ணனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலில், நாகர்கோவிலில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, 400க்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நின்றிருந்ததைக் கண்டதாகவும், முறைப்படி ஆவணங்கள் இருந்தும் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் கூறியதாகவும் தெரிவித்தார். எனவே, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக உள்ளூர் எம்.எல்.ஏ. ஆஸ்டினுடன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை வைத்ததாகக் கூறினார்.
மேலும், கேரளாவையும் இந்தியாவோடு ஒப்பிட்டுப் பேசியது குறித்து எழுப்பிய கேள்விக்கு, 'கேரளாவும் இந்தியாவில்தானே இருக்கிறது. அது என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது?' என்று ஒரு வார்த்தைதான் சொன்னதாகவும், கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று கூறவில்லை என்றும் விளக்கமளித்தார். கனிம வளங்கள் கொண்டு செல்லப்படாவிட்டால் நாகர்கோவிலில் கட்டிடங்கள் எப்படி கட்டப்படும் என்றும் கேள்வி எழுப்பிய அவர், சகோதரர் மனோ தங்கராஜ் மனக்குழப்பத்தில் இருக்கிறார் என்று விமர்சித்தார்.