கேரள முன்னாள் முதல் மந்திரி பினராயி விஜயன் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். கொச்சி கனிமவள மோசடி வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இந்த வழக்கில், கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (CMRL) நிறுவனம், பினராயி விஜயனின் மகள் டி. வீணாவுக்கு சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சுமார் ரூ.1.72 கோடி சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பணப்பரிமாற்றம் தொடர்பாகவே அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2024 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை ஒரு பணமோசடி வழக்கைப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சிஎம்ஆர்எல் நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததை அடுத்து, இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் பினராயி விஜயன் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனை மூலம் கனிமவள மோசடி மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஆதாரங்களை அமலாக்கத்துறை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
