புதுடெல்லி: அதிக சம்பள வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை காட்டி, இந்திய இளைஞர்களை சைபர் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்த கம்போடியா மற்றும் தாய்லாந்துக்குக் கடத்திய முன்னாள் கப்பல் அதிகாரி ஒருவர் ஆக்ராவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல இளைஞர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு, சைபர் மோசடி மையங்களில் சிக்கியதாக அளித்த புகாரைத் தொடர்ந்தே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'முன்னாள் வணிகக் கப்பல் அதிகாரியான நாகேஷ் குமார், சர்வதேச ஆள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவன் ஆவார். வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இவரது கும்பல் இந்திய இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளது' என்றனர்.
மேலும், 'இந்த இளைஞர்களைத் தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு அனுப்பியுள்ளது. அங்கு சென்றதும் இந்த இளைஞர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு, சைபர் மோசடி மற்றும் ஆன்லைன் குற்றங்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்' என்றும் தெரிவித்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் ஆக்ரா சைபர் குற்றப் பிரிவு தீவிர விசாரணை நடத்தியது. பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், இறுதியில் இமாச்சல பிரதேசத்தின் பாலம்பூர் பகுதியில் நாகேஷ் குமாரைக் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.