அரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் உள்ள நாரா கிராமத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் பிரபலமான மருமகள், குட்டை உடையில் வீடியோ வெளியிட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலால் மாமனாரும் மாமியாரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேஷ் (46) மற்றும் சுமன் (44) தம்பதியினரின் மகன் ஆஷிஷ், கடந்த ஆண்டு சினேகா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினேகா சமூக வலைத்தளங்களில், குறிப்பாக ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். கிராமப்புறங்களில் பாரம்பரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில், சினேகா தொடர்ந்து குட்டையான ஆடைகளில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இதற்கு சினேகாவின் மாமனாரும் மாமியாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சினேகாவுக்கும் அவரது மாமனார், மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், இந்த தகராறில் சினேகா தனது மாமனார், மாமியாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் தாக்குதலால் வேதனையடைந்த ராஜேஷ் மற்றும் சுமன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். சுயநினைவின்றி கிடந்த அவர்களை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ராஜேஷின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.