சென்னை: பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.3 உயர்ந்துள்ளதோடு, வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலையும் கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.103.90 ஆகவும், டீசல் ரூ.95.47 ஆகவும், இயற்கை எரிவாயு ரூ.91.50 ஆகவும் உயர்ந்துள்ளது. பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50%க்கும் அதிகமாக உயர்ந்திருப்பதும், அமெரிக்க-ஈரான் போர் காரணமாக ஹோர்மஸ் நீரிணை மூடப்பட்டு, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதும் விலை உயர்வுக்குக் காரணம் என அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.18 வரை இழப்பு ஏற்படுவதால், வேறு வழியின்றி விலை உயர்த்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ள முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் ஏற்கனவே மிக அதிகமாக உள்ள நிலையில், இந்த விலை உயர்வின் தாக்கத்தை எண்ணெய் நிறுவனங்களும் மத்திய அரசும் தாங்கிக்கொண்டு, விலை உயர்வை தவிர்த்திருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த எதிர்பார்ப்பை எண்ணெய் நிறுவனங்கள் மதிக்காதது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதால், காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கணிசமாக உயரும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, இந்த விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.