சேலம்: சென்னையில் உள்ள முன்னணி ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அகல்யா (27) என்ற இளம் பெண் ஊழியர், தனது சொந்த ஊரான சேலத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், விலை உயர்ந்த செல்போன் வாங்கியதில் ஏற்பட்ட கடன் சுமையால் மனமுடைந்து இந்த விபரீத முடிவை எடுத்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலம் தாதகாப்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த மணி என்பவரின் மகளான அகல்யா, கடந்த 8-ஆம் தேதி விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சமீபத்தில், அவர் சுமார் 1½ லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு விலை உயர்ந்த செல்போனை தவணை முறையில் வாங்கியுள்ளார். இதற்கான மாதத் தவணையை முறையாகச் செலுத்தி வந்த நிலையில், இந்த மாதத் தவணை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த மன அழுத்தமே அவரை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
தற்கொலை செய்துகொண்ட அகல்யாவின் உடலைப் பார்த்த குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கலங்கச் செய்தது. இதுகுறித்து தகவலறிந்த அன்னதானப்பட்டி காவல் நிலையப் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அகல்யாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலைச் சம்பவத்திற்கு செல்போன் கடன் மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.