கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்தது தொடர்பான தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
நேற்று நடைபெற்ற 16-வது நாள் விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், 'மதத்திற்கும், மதப் பிரிவிற்கும் இடையே வேறுபாடு உள்ளது. மத உரிமைகள் விவகாரத்தில் நீதிமன்றங்களின் தலையீடு ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க முடியும்' என்று வாதிட்டார். இது பலரின் கவனத்தை ஈர்த்தது.
மேலும், மற்றொரு மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி, 'இந்துத்துவம் என்பது வாழ்க்கை முறையை விட, சமூகக் கட்டமைப்பைக் கொண்ட மதத் தத்துவங்களைக் கொண்டது. இது மனிதர்களுக்கும், சக்திக்கும் இடையிலான தொடர்பையும், இருப்பின் புரிதலையும், வாழ்வின் அர்த்தங்களையும் தருவதாக உள்ளது' என தனது வாதங்களை முன்வைத்தார். மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன், 'ஒரு மதத்தில் வழக்கங்களைத் தொடர்வதா என்பதை அவசிய நடைமுறைக் கோட்பாட்டைப் பொருத்தி ஆய்வு செய்ய முடியாது' என்றும் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கவனமாகப் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அறிவிக்காமல், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளனர். இதனால், இந்த தீர்ப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.