ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத், போக்சோ சட்டத்தின் கீழ் தெலங்கானா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை, காவல்துறை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னரே அரங்கேறியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் அறியையில், மே 8-ஆம் தேதி ஹைதராபாத்தின் பேட் பஷீராபாத் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சாய் பகீரத் மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமண ஆசை காட்டி, மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்து சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், வழக்கில் மேலும் கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
முன்னதாக, தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சாய் பகீரத் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞர் சிறுமியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவர் மைனர் என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், சாய் பகீரத் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் முதல் முறை குற்றவாளி அல்ல என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி டி.மாதவி தேவி இடைக்கால தடை வழங்க மறுத்து, இறுதித் தீர்ப்பை மே 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சாய் பகீரத் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க சைபராபாத் போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டனர். மேலும், ஹைதராபாத் மற்றும் கரீம்நகரில் உள்ள அமைச்சரின் இல்லங்களில் ஐந்து தனிப்படைகள் மூலம் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை போலீஸார் தங்களின் தொழில்நுட்பக் குழுவின் உதவியுடன் சாய் பகீரத்தின் இருப்பிடத்தைக் கண்டறிந்து கைது செய்துள்ளனர். இது குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், 'சட்டத்தின் முன் அனைவரும் சமம். என் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறான், இருப்பினும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க அவனை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளேன்' என்று தெரிவித்துள்ளார். கைதான சாய் பகீரத் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.