நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது மிகப்பெரிய இழப்பு என்றும், சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ போல தமிழகத்தை மாற்ற அவர் விரும்பியதாகவும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
'மக்கள் மேடை' என்ற புதிய மக்கள் இயக்கத்தை லதா ரஜினிகாந்த் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த இயக்கத்தின் மூலம் மாநிலத்திற்காக பணியாற்ற விரும்புவோர் இணையலாம் என்றும், பெரிய மக்கள் சக்தியாக உருவாகி மாநிலத்திற்கு பல நன்மைகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். உள்ளூர் அளவில் புதிய தலைவர்களை உருவாக்கி, மக்களின் சிந்தனைகளை மாநில வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதுடன், லதா ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப் போகிறாரா என்ற கேள்வியையும் எழுப்பியது. இந்நிலையில், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது பேசிய லதா ரஜினிகாந்த், "ரஜினிகாந்த் ஒரு பெரிய தலைவர். 2021ல் அவர் அரசியலுக்கு வராதது மிகப்பெரிய மிஸ். ஒரு பெரிய தலைவரை நாம் இழந்துவிட்டோம். அவர் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில், அவருக்கு பல திட்டங்களும் கனவுகளும் இருந்தன. துரதிர்ஷ்டவசமாக, கோவிட் காலத்தில் அவர் அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் திட்டமிட்டிருந்தார். சிங்கப்பூரின் லீ குவான் யூ செய்தது போல தமிழகத்தில் செய்ய வேண்டும் என நினைத்தார். அவரது தொலைநோக்குப் பார்வையை நான் அறிவேன். தமிழகம் ஒரு பெரிய தலைவரை இழந்துவிட்டது" என்று வேதனையுடன் தெரிவித்தார்.