திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், அடுத்த 100 ஆண்டுகளுக்கான கட்சியின் மாஸ்டர் பிளான் குறித்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின்படி, திமுகவின் கிளை முதல் தலைமை வரை அதிரடி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டின் வளத்துக்கும் நலத்துக்கும் 75 ஆண்டுகளைக் கடந்தும் உழைத்து வரும் பேரியக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். ஆறு முறை தமிழ்நாட்டை ஆண்டது கழகம். இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது கழகம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக இருப்பதும் கழகம் தான். இத்தகைய அரசியல் வரலாற்றில், தேர்தல் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தபோதும், கழகம் என்றைக்கும் வலுமிக்க எஃகுக் கோட்டையாகவே கம்பீரமாக நிற்கிறது. அதற்குக் காரணம் கழகத்தின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளும், கழகத்தின் அமைப்பு முறையும் ஆகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கழக உடன்பிறப்புகளின் கருத்துகளைக் கேட்கும் நோக்கில் 19 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று நிர்வாகிகளையும் தொண்டர்களையும் நேரடியாகச் சந்தித்து, அவர்களின் கருத்துகளைப் பெற்று அறிக்கைகளாகத் தயாரித்து அளித்துள்ளன. மேலும், 'உடன்பிறப்பின் குரல்' என்ற இணையதளம் வழியாக ஆறு லட்சம் கருத்துகள் பெறப்பட்டு, அவற்றை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் அறிக்கையாகத் தொகுத்துள்ளனர்.
இந்தக் கருத்துகளின் அடிப்படையில், கழகத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் கிளைக் கழகங்கள் தொடங்கி தலைமைக் கழகம் வரை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்காக, 'கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு' ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், சக்கரபாணி, சிவசங்கர், தமிழரசி இரவிக்குமார், எம்.எம். அப்துல்லா, பரந்தாமன், டாக்டர். எழிலன், எஸ்.கே.பி. கருணா, முரசொலி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் கழக மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, சார்பு அணிகளின் மறுசீரமைப்பு, தேர்தல் பணிக்குழு சீரமைப்புகள், தலைமைக்கான பரிந்துரைகள் போன்றன குறித்து பரிந்துரைகளை வழங்கும். அடுத்த நூறாண்டுகளுக்குக் கழகத்தை வழிநடத்திடும் வகையிலான இந்த மறுசீரமைப்பு, கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் விவாதிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.