ஆந்திராவின் துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், தனது ஆதரவாளர்களிடையே உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். இதில், தமிழ்நாட்டில் நடிகர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, தனக்கு மக்கள் மத்தியில் இருந்து வரும் அழுத்தங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.
"தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, நடிகர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, என் மீது மக்கள் அதிகப்படியான எதிர்பார்ப்புகளையும், அழுத்தங்களையும் கொடுக்கிறார்கள். நமது அண்டை மாநிலத்தில் ஒரு நடிகர் கட்சி தொடங்கி முதலமைச்சராகிவிட்டார். அதேபோலவும் ஆந்திராவிலும் செய்ய வேண்டும் என பலர் என்னை வற்புறுத்துகிறார்கள்" என்று பவன் கல்யாண் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், "இது பக்கத்து வீட்டில் நடக்கும் திருமணத்திற்கு தேவையில்லாத உற்சாகத்தைக் காட்டிவிட்டு, நமது சொந்த வீட்டில் திருமணம் நடக்கவில்லை என்பதை அறியாமல் அலையும் சிறு குழந்தைகள் போல உள்ளது. ஆந்திர பிரதேசத்தின் அரசியல் சூழல் மிகவும் வேறுபட்டது. 2019 சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டபோது, அமைச்சர்கள் கூட என்னுடன் நிற்கவில்லை. எனவே, என்னை தமிழ்நாட்டு சூழலுடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம்" என்று அவர் வலியுறுத்தினார்.
நடிகர் அரசியலில் சாதிப்பது சாத்தியம் என்ற எண்ணம் மக்களிடையே பரவி வரும் நிலையில், பவன் கல்யாணின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், இரு மாநிலங்களின் அரசியல், சமூக, பொருளாதார சூழல்கள் வேறுபட்டவை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது அரசியல் நோக்கர்களிடையே முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.