தமிழகத்தில் திடீரென அதிகரிக்கும் காய்ச்சல், சளி, தொண்டை வலி, உடல் வலி போன்ற அறிகுறிகளால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது மீண்டும் கொரோனா பரவலின் அறிகுறியா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நீர்ச்சத்து இழப்பு போன்ற பிரச்சனைகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் ORS கரைசல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல்களாலும் பலர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்பு காய்ச்சல் வந்தால் 3 அல்லது 4 நாட்களில் குணமடைந்துவிடும். ஆனால், தற்போது ஒரு வாரத்திற்கு மேலாகியும் காய்ச்சல் குணமடையாத நிலை உள்ளது. குறிப்பாக, கொரோனா தொற்று காலத்தில் இருந்ததைப் போன்ற அறிகுறிகளான இருமல், தொண்டை வலி, சளி, கடுமையான உடல் வலி போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் ORS கரைசல் இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுவாக காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஒரே மாதிரிதான் இருக்கும். கொரோனா தொற்று காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் போல் தற்போது செய்வதில்லை. தேவைப்படுபவர்களுக்கு வேண்டுமானால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர். அரசு மருத்துவர்களிடம் கேட்டபோது, 'காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்று பரிசோதனை செய்யுமாறு கேட்டால், பரிசோதனை செய்யப்படும்' என்றனர்.