சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுடன் கைகுலுக்க மறுத்த விராட் கோலியின் செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் கோலியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு, கோலியின் ஆக்ரோஷமான குணத்தை சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. போட்டியின் போது, பவர்-பிளே ஓவர்களில் டிராவிஸ் ஹெட் மற்றும் விராட் கோலி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. ஆட்டம் முடிந்த பிறகு, வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். அப்போது, ஹைதராபாத் அணியின் மற்ற வீரர்களுடன் கைக்கொடுத்த கோலி, டிராவிஸ் ஹெட் கைகொடுக்க முயன்றபோது அவரை கண்டுகொள்ளாமல் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும், கிரிக்கெட் ஆர்வலர்கள் கோலியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். ஒரு ரசிகர், 'இப்போது புரிகிறதா சச்சினுக்கும் கோலிக்கும் உள்ள வித்தியாசம்? சச்சின் எப்போதும் விளையாட்டின் கண்ணியத்தை மதிப்பார். ஆனால் கோலிக்கு அது பற்றி எதுவுமே தெரியவில்லை' எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர், 'டிராவிஸ் ஹெட் ஒரு விருந்தினர். அவரை அவமதிப்பது இந்தியப் பண்பாடு அல்ல. ஆஸ்திரேலியாவில் கோலிக்கு இப்படி நடந்தால் நாம் சும்மா இருப்போமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இருப்பினும், கோலியின் தீவிர ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். டிராவிஸ் ஹெட் தான் முதலில் வம்பிழுத்தார் என்றும், தனிப்பட்ட முறையில் ஏதேனும் பேசியிருக்கலாம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். இந்த விவகாரம், கடந்த 2023 சீசனில் கௌதம் கம்பீருடன் கோலி மோதிய சம்பவத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. அப்போதும் பிசிசிஐ இருவருக்கும் அபராதம் விதித்தது. 37 வயதைக் கடந்தும் கோலி காட்டும் இந்த அதீத கோபம், இளம் வீரர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமையும் என மூத்த வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.