நடிகரும், திமுகவின் நீண்டகால உறுப்பினருமான போஸ் வெங்கட், சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்தும், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும் அவர் பேசியவை தற்போது வைரலாகி வருகின்றன.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான போஸ் வெங்கட், திமுகவின் அரசியல் விவாதங்களிலும் சமூகப் பிரச்சனைகளிலும் தனது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே அவரை விமர்சித்து வந்த போஸ் வெங்கட், விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து பல சந்தேகங்களை எழுப்பியிருந்தார். இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தனது மகள் '18 வயதாகியிருந்தால் விஜய்க்குத்தான் ஓட்டு போட்டிருப்பேன்' என்று தன்னைக் கிண்டல் செய்ததாக நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் தோல்வி குறித்துப் பேசிய போஸ் வெங்கட், கட்சி நிர்வாகிகள் சிலரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் திமிரான செயல்பாடுகளே தோல்விக்கு முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். கட்சித் தோல்வியை திமுகவினர் நேர்மையாக ஏற்றுக்கொண்டு சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 'மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவும் அன்பும் பெற்ற தலைவர் மு.க.ஸ்டாலின். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவரது தலைமையிலான ஆட்சியில் இருந்த சிலரின் செயல்பாடுகள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்' என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 'சிலர் அதிகாரத்தை தவறாக துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. சில இடங்களில் திமுக நிர்வாகிகள் மற்றவர்களை மதிக்காமல் திமிராக நடந்துகொண்டதாகவும் சொல்றாங்க. அதற்கான பரிசுதான் இந்தத் தோல்வி. அதை திமுக காரன் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். இந்தத் தோல்வியை திமுகவினர் ஏற்றுக்கொண்டு சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.