தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 'சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழா ஒரு ஆடியோ லான்ச் போல இருந்தது' என கடுமையாக விமர்சித்தார். முதல்வர் பொறுப்பில் இருந்து நழுவ பார்க்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
'தனி மனித ஒழுக்கம் தான் சமூக ஒழுக்கம்' என்று முதல்வர் கூறுவதை சுட்டிக்காட்டிய கீதா ஜீவன், 'உங்கள் கட்சிக்காரர்களுக்கே கிடைக்காத நீதி, ஒட்டுமொத்த தமிழக பெண்களுக்கு எப்படி கிடைக்கப் போகிறது? எப்படி பாதுகாப்பு வழங்கப் போகிறீர்கள்?' என ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். சென்னையில் நடந்த சிறுமி வன்கொடுமை, ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பிரச்சனை ஆகியவற்றில் உங்கள் கட்சியினர் ஈடுபட்டிருக்கும்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கேட்டார்.
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது எல்லாவற்றிற்கும் ‘சிஎம் சார்’ தான் பொறுப்பு என்று கூறினீர்கள். இப்போது முதல்வர் விஜய் ஆனவுடன் ‘தனிமனித ஒழுக்கம் தான் சமூக ஒழுக்கம்’ என்று சொல்கிறீர்கள். அப்போது இருந்த சிஎம் சார்க்கு மட்டும் சமூக ஒழுக்கம் என்று சொல்லத் தெரிகிறதா? நீங்கள் வசனம் பேசுகிறீர்களா அல்லது புரிந்து பேசுகிறீர்களா? என கீதா ஜீவன் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில், 'சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கவிழா ஒரு ஆடியோ லான்ச் போல இருந்தது. எப்படி எல்லா பிரச்சார பயணமும் ஒரு சினிமா ஒத்திகை பார்த்தது போல் இருந்ததோ, அதேபோல் இது ஆடியோ லான்ச் போன்று ஒரு நிகழ்ச்சியாக நடந்தது. அதற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது. ஒரு குழந்தை பெறுவதற்கே 10 மாதம் ஆகும். ஆட்சி மாறியவுடன் எல்லாம் ‘நாங்கள் தான், நாங்கள் தான்’ என்று சமூக ஊடகங்களில் பொய் செய்தியை ப்ரோமோட் செய்கின்றார்கள். இனி மக்கள் எல்லோரும் வரும் செய்திகள் உண்மையா என்பதை ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள். உதாரணமாக, தூத்துக்குடியில் நான் அமைச்சராக இருந்தபோது 850 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டன. இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மறுநாளே ‘எங்கள் முதலமைச்சர் சிசிடிவி கேமராக்கள் வைத்து விட்டார்’ என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. அதேபோல், நமது பகுதியில் மாணவர்களுக்காக ஏசி பஸ் ஸ்டாப் எனது சட்டமன்ற நிதியில் வைத்தோம். ஆனால் அதை தற்போது ‘மாணவர்களுக்காக ஒரு ஏசி பஸ் ஸ்டாப் வைத்து விட்டோம்’ என்று சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்' என்றும் அவர் கூறினார்.