நாடு முழுவதும் இளநிலை நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தால், மே 3 அன்று நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக, சுமார் 22.7 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நாளை (ஜூன் 21) மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளது.
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, உத்தரப்பிரதேசத்தில் இருந்து மட்டும் 3,56,291 மாணவர்கள் (15.7%) விண்ணப்பித்துள்ளனர். இது மற்ற மாநிலங்களை விட மிக அதிகமான எண்ணிக்கையாகும். மகாராஷ்டிரா 2,22,905 (9.8%) மற்றும் ராஜஸ்தான் 2,03,470 (8.9%) மாணவர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த மூன்று மாநிலங்கள் மட்டும் மொத்த பதிவில் 34.4% பங்களிப்பைக் கொண்டுள்ளன.
பீகார் (1,56,061), கர்நாடகா (1,45,466) மற்றும் தமிழ்நாடு (1,42,489) ஆகிய மாநிலங்கள் அடுத்த வரிசையில் உள்ளன. இந்த 6 மாநிலங்கள் மட்டும் ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கையில் 54% பங்கைக் கொண்டுள்ளன. மண்டல வாரியாகப் பார்க்கையில், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேசம், அரியானா, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய 8 இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து 44% மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு மாறாக, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 5 தென் மாநிலங்களின் பங்களிப்பு 23.8% ஆக உள்ளது. மிகக் குறைந்த எண்ணிக்கையில் லட்சத்தீவு (141), டாமன் மற்றும் டையூ (666), அந்தமான் நிக்கோபார் தீவுகளில் (882) பதிவுகள் வந்துள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் 9,475 மாணவர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம் (4,921), திரிபுரா (4,684), மேகாலயா (4,164) மற்றும் நாகாலாந்து (4,128) ஆகிய மாநிலங்கள் உள்ளன.