சேலம் மாவட்டம் ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணன் என்பவரின் மகள், 8 வயது மேனகா, ஏற்காடு முண்டகம் பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மலைப்பகுதி என்பதால், மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல தனியார் வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கம் போல், இந்த தனியார் வேன் ஏற்காடு லேடீஸ் சீட் பகுதிக்குச் சென்று குழந்தைகளை இறக்கி, அங்கிருந்து மற்றொரு வேனில் பள்ளிக்கு அனுப்பி வைக்கும். இன்று காலை, சிறுமி மேனகாவுடன் மற்ற மாணவிகளும் வேனில் பள்ளிக்குச் சென்றுள்ளனர். லேடீஸ் சீட் பகுதிக்கு வேன் சென்றதும், மாணவிகள் இறங்கியுள்ளனர். மேனகாவும் அவர்களுடன் இறங்கியுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, மாணவி மேனகா வேனை விட்டு இறங்குவதை ஓட்டுநர் ரங்கநாதன் சரியாக கவனிக்கவில்லை. அவர் வேனை இயக்கியபோது, மேனகா வேனின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த துயரச் செய்தியறிந்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். ஏற்காடு காவல் நிலைய போலீசார் உடனடியாக விரைந்து வந்து, பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சிறுமியின் உடலை உடற்கூராய்வுக்காக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவனக்குறைவாக செயல்பட்ட ஓட்டுநர் ரங்கநாதனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.