சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் முக்கிய நடவடிக்கையாக, கடந்த நிதியாண்டில் மட்டும் 26 ரயில் நிலையங்களில் புதிதாக 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களை தடுப்பதோடு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய கண்காணிப்பு வளையத்திற்குள் எண்ணூர், அத்திப்பட்டு, மீஞ்சூர், பொன்னேரி, பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், வில்லிவாக்கம், ஆவடி, திருநின்றவூர், கடம்பத்தூர், வண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரம் உள்ளிட்ட 26 முக்கிய நிலையங்கள் வந்துள்ளன. குறிப்பாக, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு புறநகர் பாதை மற்றும் பறக்கும் ரயில் வழித்தடம் முழுவதும் இப்போது முழுமையான சிசிடிவி கண்காணிப்பில் உள்ளது.
இதுதவிர, சென்னை – அரக்கோணம் மற்றும் சென்னை – கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்தகட்டமாக பூங்கா நகர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், அம்பத்தூர், திருத்தணி, ஆம்பூர் உள்ளிட்ட 13 ரயில் நிலையங்களில் 495 கேமராக்கள் நிறுவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, பேசின் பிரிட்ஜ், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 22 முக்கிய ரயில்வே சந்திப்புகள் மற்றும் ரயில்வே கேட் பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பொருத்தப்பட்டுள்ள அனைத்து கேமராக்களும் ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வருவதே தங்களின் இலக்கு என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.