ஐபிஎல் 2026 தொடரின் 66-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த போட்டி சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியமானது. பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற அழுத்தத்துடன் சென்னை அணி களமிறங்கியுள்ளது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தார். 'இந்த ஆடுகளத்தில் கூடுதல் வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அதை ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். கடந்த போட்டியில் நாங்கள் கடுமையாகப் போராடியும் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் இன்று எளிமையாக விளையாடி வெற்றியைப் பெறுவோம்' என அவர் தெரிவித்தார்.
சிஎஸ்கே அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அகீல் உசைன் மற்றும் பிரசாந்த் வீர் ஆகியோருக்குப் பதிலாக குர்ஜப்னீத் சிங் மற்றும் மேத்யூ ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மறுபுறம், குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில், தாங்களும் முதலில் பந்துவீசவே விரும்பியதாகக் கூறினார். குஜராத் அணியில் சாய் கிஷோருக்குப் பதிலாகப் பிரசித் கிருஷ்ணா விளையாடுகிறார்.
இந்த ஆடுகளம் சிவப்பு மண் வகையைச் சார்ந்தது என்பதால் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இருக்கும் என முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். மைதானத்தில் புற்கள் சீராக இருப்பதால் பந்து பேட்டிற்கு நன்கு வரும். சுழற்பந்து வீச்சை விட வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத் மைதானத்தின் ஒரு பக்கம் எல்லைக்கோடு 62 மீட்டராகவும், மறுபக்கம் 70 மீட்டராகவும் உள்ளது. இதனால் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களை எளிதாக அடிக்க வாய்ப்புள்ளது. 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே அது சவாலான இலக்காக இருக்கும். பிளே-ஆப் கனவை தீர்மானிக்கும் இந்த ஆட்டத்தில் சென்னை ரசிகர்கள் தங்களது அணிக்கு ஆதரவாக மைதானத்தில் குவிந்துள்ளனர்.