இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை மைதானத்தில் வம்புக்கு இழுத்து மோதலில் ஈடுபட்ட இலங்கை ஏ அணி வீரர் விஷென் ஹாலம்பகேவுக்கு, இலங்கை கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் லீக் ஆட்டம் டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. 19 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு கடைசி 3 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வைபவ் சூர்யவன்ஷி ஸ்ட்ரைக்கில் இருந்தார். ஆனால், அவரால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியின் போது, இலங்கை ஆல்ரவுண்டர் விஷென் ஹாலம்பகே, 15 வயதான வைபவ்வை நோக்கி அவரது ஐபிஎல் 2026 ஆட்டத்தைக் குறிப்பிட்டு தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் மிக மதிப்புமிக்க வீரர் விருதை வென்றவர் வைபவ் என்பது குறிப்பிடத்தக்கது. தோல்விக்குப் பிறகு ஏமாற்றத்துடன் வெளியேறிய வைபவ்வை நோக்கி ஹாலம்பகே வீண் வம்பு செய்ய, ஆத்திரமடைந்த வைபவ் அவரை நெஞ்சில் தள்ளி மோதலில் ஈடுபட்டார்.
இந்த மோதல் தொடர்பாக கள நடுவர்களின் அறிக்கையின் அடிப்படையிலும், போட்டி நடுவர் பிரதீப் ஜெயபிரகாஷ் அளித்த பரிந்துரையின்படியும் ஹாலம்பகேவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளது. மூத்த விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவுக்கும் மற்றொரு விவகாரத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் ஐசிசியின் கட்டுப்பாட்டிற்குள் வராததால், இலங்கை வாரியம் தனது சொந்த விதிமுறைகளின் கீழ் இந்த ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது. பிசிசிஐ வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், புதன்கிழமை ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிராக நடைபெறும் அடுத்த லீக் ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி வழக்கம் போல் விளையாட உள்ளார். மைதானத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இரு அணி வீரர்களுக்கும் நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பகுதுலே கருத்து தெரிவித்துள்ளார்.