இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து சூர்யகுமார் யாதவ் திடீரென நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றத்திற்கு தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் காரணம் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு தங்கம் வெல்ல விரும்புவதாக சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் பொதுவெளியில் பேசியிருந்தார். இந்த பேச்சு பயிற்சியாளர் கம்பீருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அணியில் இடமும், கேப்டன் பதவியும் நிரந்தரமாக இருக்கும் என சூர்யகுமார் யாதவை கம்பீர் அப்போதே எச்சரித்திருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து நடந்த 2026 ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 147.54 ஸ்டிரைக் ரேட்டில் வெறும் 270 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி 20.77 ஆக சரிந்தது. இது 2017க்கு பிறகு அவர் சந்தித்த மிக மோசமான சரிவாகும். சூர்யகுமாரின் இந்த மோசமான ஃபார்ம் காரணமாக அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த டி20 அணியில் இருந்தே கழற்றி விடலாம் என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் கம்பீர் விவாதித்துள்ளார். அகர்கரும் இதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவரை நியமிக்கலாம் என கம்பீர் பரிந்துரைத்த நிலையில், அஜித் அகர்கர் அதை ஏற்கவில்லை. ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் திறனை சுட்டிக்காட்டிய அகர்கர், அவரே தகுதியான நபர் என வாதிட்டுள்ளார். இதையடுத்து பிசிசிஐ-யுடன் ஆலோசனை நடத்திய கம்பீர், சூர்யகுமாரை நீக்குவதற்கான அனுமதியை பெற்றார். பின்னர் கம்பீரும், அகர்கரும் இணைந்து ஸ்ரேயாஸ் ஐயரை புதிய டி20 கேப்டனாக ஒருமனதாக தேர்வு செய்தனர். அணியின் நலன் என்று வரும்போது நண்பராக இருந்தாலும் கம்பீர் எவ்வளவு கறாராக செயல்படுவார் என்பதை இந்த சம்பவம் அப்பட்டமாக நிரூபித்துள்ளது.