இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில், அயர்லாந்து அணி இந்தியாவிற்கு 155 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் சூர்யான்ஷ் ஷெட்கே மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. தனது 100-வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய ஹாரி டெக்டர் 44 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அரைசதம் அடித்தார். பென் காலிட்ஸுடன் இணைந்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்திய தரப்பில் அறிமுக வீரர் பிரின்ஸ் யாதவ் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜெய் மூந்த்ரா வீசிய முதல் பந்திலேயே சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அபிஷேக் சர்மாவும் அதே ஓவரில் ஆட்டமிழக்க, இந்திய அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன் குவிக்க முயன்றனர். ஆனால், ஜெய் மூந்த்ரா மீண்டும் பந்துவீச வந்து ஸ்ரேயாஸ் ஐயரை (5 ரன்கள்) போல்டாக்கி அதிர்ச்சி அளித்தார். இதனால் இந்திய அணி 2.4 ஓவர்களில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஜெய் மூந்த்ரா வெறும் 1.4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். வாய்ப்புக்காக வைபவ் சூர்யவன்ஷி காத்திருக்கும் நிலையில், சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பி வருவது அவருடைய இடத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதனால், அடுத்த இங்கிலாந்து தொடரில் அவர் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.