சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுக்கு இணையாக, தற்போது 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த இளம் நட்சத்திரம், கிரிக்கெட் உலகில் புதிய சகாப்தத்தை படைத்து வருகிறார்.
சனிக்கிழமை மாலை, அருண் ஜெட்லி மைதானத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி நடைபெற்றபோது, மனேசரைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ராஜீவ் யாதவ், 'சூர்யவன்ஷி பயிற்சி செய்வதை நான் பார்க்க மைதானத்திற்குள் செல்ல முடியுமா? நான் அவரைப் பார்க்க வேண்டும்' என்று பாதுகாப்பு அதிகாரியிடம் நெகிழ்ச்சியுடன் கேட்டார். அவரது கோரிக்கை கனிவாக நிராகரிக்கப்பட்டாலும், ரசிகர்களின் ஆர்வம் சூர்யவன்ஷியின் புகழுக்குச் சான்றாக அமைந்தது.
பயிற்சியின் போது, சுமார் 40 நிமிடங்கள் பந்துவீச்சாளர்களையும், த்ரோடவுன் நிபுணர்களையும் எதிர்கொண்ட சூர்யவன்ஷி, தற்காப்பு ஷாட்களை விட, பந்தை எவ்வளவு பலமாக, நீண்ட தூரம் அடிப்பது என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில், 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள சூர்யவன்ஷி, 40 சராசரியுடன் 440 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 236.55 என்ற அசத்தல் ஸ்ட்ரைக் ரேட்டுடன், 40 சிக்ஸர்களையும் பறக்கவிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்கக்கார, வைபவ் சூர்யவன்ஷி குறித்துப் பேசுகையில், 'வைபவ் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிப்பதே முக்கியம். அவனது மனதைக் குழப்புவதே நாங்கள் செய்யக்கூடிய மோசமான செயல். அவனுக்குத் தேவைப்பட்டால், அவனுடன் பேசுவோம். வைபவ் தனது பேட்டிங்கை மிகவும் நேசிக்கிறான். அவன் ஆட்டத்தை மிக நன்றாகப் புரிந்துகொள்கிறான். அவன் ஒரு புத்திசாலிச் சிறுவன், தன்னையும் ஆட்டத்தையும் தொடர்ந்து புரிந்துகொள்வான். சில சமயங்களில் வைபவ், வைபவ்வாகவே இருப்பதுதான் சிறந்தது' என்று குறிப்பிட்டார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு வரும்போது, பந்துவீச்சாளர்கள் அவனுக்கு எதிராக வியூகம் வகுப்பார்கள். ஆனால், பேட்டிங் மீதான அவனது ஆர்வத்தை அவன் ஒருபோதும் இழக்கக் கூடாது. அவன் எங்களுக்கு ஒரு வெறும் சிறப்புத் திட்டம் அல்ல, மாறாக ஒரு சிறப்பு வீரர்' என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர், இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் பெல், இந்த இளைஞருக்கு வரவிருக்கும் சவால்கள் குறித்துப் பேசுகையில், 'எந்தவொரு இளம் வீரரும் எதிர்கொள்ளும் சவால், நீங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டும் என்பதுதான், ஆனால் அவன் ஒரு பயங்கரமான திறமைசாலி' என்று பெல் குறிப்பிட்டார்.