தமிழகத்தின் புதிய முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற விழாவில், ஒரு போலீஸ் அதிகாரி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜை அச்சு அசலாக ஒத்திருந்ததால், அவர் சமூக வலைதளங்களில் வைரலானார். யார் அந்த அதிகாரி என்ற ஆர்வம் அனைவர் மத்தியிலும் ஏற்பட்ட நிலையில், தற்போது அந்த அதிகாரியை அன்ஷுல் கம்போஜ் நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
முதல்வர் பதவியேற்பு விழா நேரலையில் ஒளிபரப்பானபோது, மேடைக்கு அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த அந்த போலீஸ் அதிகாரியின் முகம், சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜின் முகத்தையே நினைவுபடுத்தியது. இதைக் கவனித்த இணையவாசிகள், 'மைதானத்தில் இருந்து நேராக போலீஸ் உடையில் முதல்வர் விழாவுக்கு அன்ஷுல் கம்போஜ் சென்றாரா?' எனப் பலவிதமான மீம்ஸ்களைப் பரப்பினர். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமானது.
இந்த வைரல் விவகாரம் குறித்து, தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பாணியில் நகைச்சுவையாக கருத்து தெரிவித்திருந்தார். நிலைமை மேலும் பரபரப்பான நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், 'உண்மையான அன்ஷுல் கம்போஜ், லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்' என வேடிக்கையாக விளக்கம் அளித்தது.
இந்நிலையில், அந்த போலீஸ் அதிகாரியை அன்ஷுல் கம்போஜ் சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் சந்தித்தார். இது குறித்து கம்போஜ் கூறுகையில், 'எனது நண்பர்கள் பலர் இந்த மீம்ஸ்களை இன்ஸ்டாகிராமில் அனுப்பி, 'நீ அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' எனத் தொடர்ச்சியாகக் கேட்டனர். நான் அங்கு இல்லை என அவர்களிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன். அந்த அதிகாரி பார்ப்பதற்கு கிட்டத்தட்ட என்னைப் போலவே இருக்கிறார். அவர் தலையில் உள்ள தொப்பியை கழற்றினால் தான் எங்கள் முக ஒற்றுமை முழுமையாகத் தெரியும்' என சிரித்துக் கொண்டே கூறினார். பயிற்சி முகாமின் போது அந்த அதிகாரியை சந்தித்த கம்போஜ், அவருடன் நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தார்.