தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 116 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக்குப் பதிலாக, 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்று சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபித்துள்ளது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன. மொத்தம் 22 எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்த நிலையில், 5 எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகித்தனர். இருப்பினும், திமுக எம்.எல்.ஏ.க்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புடன் இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.
முன்னதாக, தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்காக, எம்.எல்.ஏ.க்கள் சொகுசுப் பேருந்துகளில் சட்டமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முந்தைய தினம், முதல்வர் விஜய் பல கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கோரியிருந்தார்.