வரும் செப்டம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரை நடத்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் தீவிரமாக திட்டமிட்டுள்ளது. பிசிசிஐ உடனான உறவில் சில கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டாலும், இந்தத் தொடரை வெற்றிகரமாக நடத்துவோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்ததில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, பாதுகாப்பு காரணங்களைக் கூறி போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கோரிக்கை விடுத்தது. ஐசிசி இதற்கு ஒப்புக்கொள்ளாததால், பாகிஸ்தானுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி உலகக் கோப்பையில் சேர்க்கப்பட்டது. தற்போது இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயான உறவு சீரடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊடகக் குழுத் தலைவர் ஆசிப் ரப்பானி கூறுகையில், 'திட்டமிட்டபடி இந்தியத் தொடரை நடத்துவோம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடர் உள்ளிட்ட அடுத்தடுத்த இருதரப்பு தொடர்களுக்கான ஊடக ஒளிபரப்பு உரிமைகளுக்கான டெண்டரை நாங்கள் வெளியிட்டுள்ளோம். நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவிற்கு எதிரான தொடர் மூலம் கிடைக்கும் நன்மைகள் அதிகம் என்பதால், இதற்கான அறிகுறிகள் சாதகமாகவே உள்ளன' என்றார்.
இந்த அட்டவணையின்படி, இந்திய அணி ஆகஸ்ட் 28 அன்று வங்கதேசம் சென்றடையும். செப்டம்பர் 1, 3 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும், செப்டம்பர் 9, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர் முதலில் 2025 ஆகஸ்ட்-செப்டம்பரில் நடைபெறவிருந்தது, ஆனால் இரு வாரியங்களின் ஒப்புதலுடன் செப்டம்பர் 2026க்கு ஒத்திவைக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இரு அணிகளின் கால அட்டவணையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இரு வாரியங்களும் கூட்டாக தெரிவித்தன.