பெங்களூருவில் உள்ள கல்குவாரி ஒன்றில் பெரும் பாறை சரிந்து விழுந்த கோர விபத்தில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தெற்கு பெங்களூருவின் மதனபட்டணத்தில் உள்ள காவேரி என்ற கல்குவாரி நிறுவனத்தில் நிகழ்ந்துள்ளது.
கல்குவாரியில் சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது, தொழிலாளர்கள் அருகில் நிற்பதை கவனிக்காமல் இயந்திரத்தை இயக்கியதில், பிரம்மாண்ட பாறை ஒன்று சரிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில், பீகாரைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.