ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், கேப்டன் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவரும் அதிரடியாக சதம் அடித்து இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 52 ஆண்டுகளில் நிகழாத ஒரு மாபெரும் உலக சாதனையை படைத்துள்ளனர். இது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாகும்.
இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை 1974 ஜூலை 13 அன்று விளையாடியது. அன்று முதல் இன்று வரை 1077 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், ஒரே ஒருநாள் போட்டியில் 2 இந்திய பேட்ஸ்மேன்கள் 80 பந்துகளுக்கும் குறைவாக எதிர்கொண்டு சதம் அடிப்பது இதுவே முதல் முறை.
லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இஷான் கிஷன் 71 பந்துகளில் சதத்தை எட்டி, மொத்தம் 79 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 125 ரன்கள் குவித்தார். மறுபுறம், கேப்டன் சுப்மன் கில் 77 பந்துகளில் சதம் அடித்து, 22 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 110 பந்துகளில் 154 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு வெறும் 140 பந்துகளில் 224 ரன்களைச் சேர்த்து அதிரடி காட்டியது.
இவர்களின் அதிரடியால் இந்திய அணி 49.5 ஓவர்களில் 402 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 8வது முறையாக 400 ரன்களைக் கடந்த இந்தியா, அதிக முறை 400 ரன்களைக் கடந்த அணிகள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் உலக சாதனையை (8 முறை) சமன் செய்தது. மேலும், ஒருநாள் வரலாற்றில் 400 ரன்களுக்கு மேல் குவித்து 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆன முதல் அணி என்ற விசித்திரமான சாதனையையும் இந்தியா பெற்றுள்ளது. பின்னர் 403 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை வென்றது.