ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது சிஎஸ்கே. இதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.
சிஎஸ்கே அணி விளையாடிய 14 போட்டிகளில் 6 வெற்றிகளையும், 8 தோல்விகளையும் சந்தித்து, 12 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இந்தப் போட்டியை நிறைவு செய்தது. ஆரம்பத்தில் தடுமாறிய அணி, பின்னர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்தது. இதனால் இம்முறை கண்டிப்பாக பிளே ஆஃப் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கிய கட்டத்தில் முக்கிய வீரர்கள் காயம் அடைந்து வெளியேறியது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்தத் தொடரின் ஆரம்பத்திலிருந்தே சிஎஸ்கே அணி ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸை நம்பியிருந்தது. ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் வெளியேறினார். மேலும், அணியின் அனுபவ வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனி காயம் காரணமாக இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமதும் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இவர் யாக்கர்களை சிறப்பாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தார்.
இவை மட்டுமல்லாமல், ஆரம்ப கட்டத்தில் அதிரடியாக பேட்டிங் செய்த ஆயுஷ் மாத்ரேயும் காயம் காரணமாக வெளியேறினார். ஜெமி ஓவர்டன் பந்துவீச்சு அணியின் முதுகெலும்பாக இருந்தது, ஆனால் அவரும் காயம் அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது சிஎஸ்கே பந்துவீச்சை பலவீனப்படுத்தியது. இவ்வளவு வீரர்கள் காயமடைந்த பிறகும், உர்வில் படேல், ஜிமி ஓவர்டன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் அபாரமாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்த முயற்சித்தனர். இருப்பினும், கடைசி மூன்று ஆட்டங்களில் ஒன்று அல்லது இரண்டில் வெற்றி பெற்றிருந்தால் கூட பிளே ஆஃப் சென்றிருக்க முடியும். ஆனால், வீரர்கள் தொடர்ந்து காயத்தால் வெளியேறியதே இம்முறை சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.