2026 ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அணியின் நட்சத்திர வீரரும், ஜாம்புவானுமான எம்.எஸ்.தோனி, தனது நீண்ட ஐபிஎல் பயணத்தில் முதன்முறையாக ஒரு போட்டியில் கூட விளையாடாமல் தொடரிலிருந்து வெளியேறும் பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்து, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், தோனியின் இந்த சீசன் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே, கெண்டைக்கால் தசைப்பிடிப்பு மற்றும் கட்டைவிரல் காயத்தால் தோனி அவதிப்பட்டு வந்தார். குஜராத் அணிக்கு எதிரான இந்த வாழ்வா-சாவா போட்டியிலும் அவர் களமிறங்கவில்லை. இதுகுறித்து போட்டியின் முன்பாகப் பேசிய பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி, தோனிக்கு கட்டைவிரலில் காயம் இருப்பதாகவும், அவர் தற்போது ஓய்வில் இருப்பதாகவும், அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றால் மட்டுமே அவர் மீண்டும் விளையாடுவார் என்றும் கூறியிருந்தார். ஆனால், நேற்றைய தோல்வி அந்த நம்பிக்கையையும் தகர்த்துவிட்டது.
இதுவரை, 2008 முதல் 2025 வரையிலான ஐபிஎல் சீசன்களில், தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார். அவரது ஒட்டுமொத்த ஐபிஎல் பயணத்தில், அவர் வெறும் 5 போட்டிகளை மட்டுமே தவறவிட்டிருந்தார். 2010-ல் 3 போட்டிகளிலும், 2019-ல் முதுகு வலி மற்றும் காய்ச்சல் காரணமாக 2 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. ஆனால், கடந்த 2020 முதல் 2025 வரை நடந்த அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய அவர், இந்த ஆண்டு ஒரு லீக் போட்டியில் கூட விளையாடாமல் போனது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 229 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணி, 13.4 ஓவர்களில் வெறும் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. 89 ரன்கள் வித்தியாசத்தில் ஏற்பட்ட இந்த தோல்வி, சென்னையைத் தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றியுள்ளது. சிஎஸ்கே அணியின் இந்த வெளியேற்றம், தோனியின் ஐபிஎல் எதிர்காலம் குறித்த அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இந்த சீசன் முடிவடைந்திருப்பது, ஒரு சகாப்தத்தின் அமைதியான விடைபெறலாக இருக்குமோ என்ற கவலையில் கிரிக்கெட் உலகம் ஆழ்ந்துள்ளது. அடுத்த ஆண்டு தோனி மீண்டும் வருவாரா அல்லது இதுதான் அவரது ஐபிஎல் பயணத்தின் முடிவா என்பது பெரும் மர்மமாகவே உள்ளது.